வெளிநாட்டிலிருந்து வந்த பரிசுப் பொதியில் காத்திருந்த ஷாக்
தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த வான்வழிப் சரக்குத் தொகுதியொன்றில் இருந்து, ரூபா 10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களைக் கட்டுநாயக்க விமான நிலையச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய பொதியாக அனுப்பப்பட்ட நிலையிலேயே இந்தப் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சோதனைகள்
குறிப்பிட்ட பரிசுப் பொருட்கள் அடங்கிய தொகுதி, சோதனையிடப்பட்டு விடுவிக்கப்படும் வரை களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்ததுடன், அந்தச் சோதனைகள் நேற்று (31) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது, உலோகக் கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொலித்தீன் பைகளிலிருந்து மரிஜூவானா, ஹஷீஷ் உள்ளிட்ட 10.608 கிலோ கிராம் எடையுள்ள போதைப்பொருட்களைச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதியின் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாவிற்கும் (106,080,000) அதிகமெனத் தெரிவிக்கப்படுகிறது.