இந்தியாவில் சாந்தன் அண்ணாவின் இறப்பு... ஆதங்கத்தை வெளியிட்ட இலங்கை எம்.பி!
சாந்தன் அண்ணாவின் மரணம் என்பது இன்று தமிழ் தேசம் முழுவதையும் பாதித்து இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (29-02-2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சாந்தன் அண்ணாவின் 33 ஆண்டுகள் சிறை வாழ்க்கை அவரோடு குற்றவாளி என்று கூறப்பட்டவர்களின் நிலைமை உண்மையில் இந்த உலகத்தில் மனிதாபிமானம் இல்லை என்பதைதான் எடுத்துக் காட்டுகின்றது.
கடுமையான சிறைவாசத்துக்கு பின்னர் இந்திய உச்ச நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டவர்கள் அவர்கள் விரும்பியவர்களுடன் செல்ல விடாது இந்தியவினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இது தொடர்பாக இந்திய உயர் அதிகாரிகளிடம் சாந்தன் அண்ணாவை இலங்கை கொண்டு வருவதில் என்ன தடைகள் இருக்கின்றது.
இலங்கை அரசாங்கத்தினால் தடைகள் இருந்தால் அதனை வெளிப்படையாக கூறுமாறு கேட்டிருந்தோம். அப்படி எதுவும் இல்லை. தாம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கின்றோம் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதனை சாந்தன் அண்ணாவின் தாயாரிற்கு தெரிவித்திருந்தோம். அந்த தாய் அவரின் விடுதலைக்காக மிகுந்த சிரத்தைகளை பட்டிருந்தார்.
அந்த தாயுடன் சேர்ந்து வாழ கடைசி காலத்தில் கூட ஏற்பாடுகளை ஏற்படுத்தாத மானிதாபிமானம் அற்ற இந்த உலகை நினைத்து கவலை கொள்கின்றோம். தமிழ் மக்கள் இவற்றை மனதில் நிறுத்த வேண்டும் - என்று குறிப்பிட்டுள்ளார்.