போதை தலைக்கேறி விமானப் பணிப் பெண்களிடம் பாலியல் சேட்டை: பயணி கைது
சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு (BIA) வந்த விமானத்தில் இரண்டு பெண் விமான பணிப்பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட முயன்ற பயணி ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் அதுருகிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சந்தேக நபர் நேற்று (15) இரவு 10.00 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.
அதிக குடிபோதை
அதிக குடிபோதையில் இருந்த சந்தேக நபர், பணியில் இருந்த இரண்டு பெண் விமான பணிப்பெண்களை பாலியல் வன்முறை செய்ய முயன்றுள்ளார். விமான பணிப்பெண்கள் இந்த சம்பவத்தை விமானிக்கு தெரிவித்ததை அடுத்து, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, விமானம் தரையிறங்கியதும், சந்தேக நபர் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க பொலிஸாரிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக இரண்டு விமான பணிப்பெண்களிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட பயணி அதிக அளவில் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபர் இன்று (16) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.