இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் நாட்டை விட்டு தப்பியோடும் மக்கள்
இலங்கையில் நிலவும் நெருக்கடி நிலமை காரணமாக இலங்கையர்கள் சிலர் தனுஷ் கோடிக்கு படகு மூலம் தஞ்சம் அடைந்துள்ள சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வரலாற்றில் இல்லாத அளவிற்கு இலங்கையில் மிக மோசமான பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதுடன் கடந்த 75 வருடங்களில் இல்லாத நிலைக்கு பொருளாதாரம் நலிவடைந்துள்ளது.
இதன் காரணமாக ஒரே வாரத்தில் இரண்டு முறை சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கையேந்தும் நிலைக்கு சென்றுவிட்டது. சமையல் எரிவாயு மதல் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் மக்கள் பல கிலோ மீட்டர் வரிசையில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கையர்கள் சிலர் தனுஷ் கோடி பகுதிக்கு படகு மூலம் வந்து தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்தியா இலங்கை இடையே 13 மணல் திட்டு உள்ள பகுதியில் இன்று கடலோர காவல்படையினர் ரோந்து பணிகளை செய்து வந்தனர். அப்போது தனுஷ் கோடி மூன்றாம் மணல் திட்டு பகுதியில் 1 ஆண், 2 பெண்கள், ஒரு கை குழந்தை, 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை உடனே மீட்ட கடலோர காவல்படையினர் க்யூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் க்யூ பிரிவு பொலிஸார் நடத்திய விசாரணையில் , நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தமிழ்நாட்டிற்கு வந்ததாக தெரிவித்த அவர்கள், இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை. உணவு கிடைக்கவில்லை, குழந்தைகளுக்கு பால் கொடுக்க கூட முடியவில்லை. விலைவாசி அதிகமாகிவிட்டது.
வேலையும் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு வந்தால் தப்பித்துக்கொள்ளலாம். இங்கே ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்று நம்பி வந்ததாக கூறியுள்ளனர். அதேவேளை இவ்வாறு தஞ்சம் கோரி வந்தவர்கல் இலங்கையில் இருக்கும் தமிழர்களா அல்லது சிங்களர்களா என்ற விவரம் வெளிவரவில்லை.
மேலும் இலங்கையில் நிலவும் பொருளாதார தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் இருக்கும் மேலும் பலர் தமிழ்நாட்டிற்கு தப்பித்து வர வாய்ப்பு உள்ளதாக க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல்கள் வந்துள்ளன. இதனையடுத்து தமிழக கடலோர எல்லை ரோந்து பணிகளில் கடலோர காவல்படையும், உளவுத்துறையும் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.


