ஆர்யன்கானுடன் எடுத்த செல்பி; சிக்கலில் மாட்டிய முக்கிய நபர்!
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பிரபல பொலிவூட் நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யன் கானுடன் எடுத்துக் கொண்ட செல்பியில் முக்கிய சாட்சியாக கருதப்படும் கொசாவி என்ற நபரை புனே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளநிலையில், அவரை பிணையில் எடுக்க அவரது தரப்பு பெறும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் ஆர்யன் கானுக்கு பிணை கிடைக்காத நிலையில், போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை மூன்றாவது நாளாக இன்றும் தொடரவுள்ளது.
இந்த நிலையில் வழக்கில் தனியார் துப்பறியும் நிபுணர் கிரண் கோசவி என்பவர் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் கோசவி சாட்சியாக சேர்க்கப்பட்ட ஓரிரு நாளில் தலைமறைவாகிய நிலையில் கோசவி மீது புனே பொலிஸார் மோசடி வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
ஆர்யன் கான் பிடிபட்ட போது அவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கோசவி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டார். இதனையடுத்து கோசவி உத்தரப்பிரதேசத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் லக்னோ பொலிஸில் சரணடைய முயன்றபோதும் அது முடியவில்லை.
இந்நிலையில் புனேயில் கோசவி கைது செய்யப்பட்டுள்ளார். இதனை புனே பொலிஸ் கமிஷனர் அமிதாப் குப்தா தெரிவித்தார். கோசவி பிடிபட்டு இருப்பதால் இவ்வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.