சட்டவிரோத இஞ்சி, ஏலக்காய் மற்றும் பூச்சிக்கொல்லி போத்தல்கள் பறிமுதல்
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட உலர் இஞ்சி, ஏலக்காய் மற்றும் பூச்சிக்கொல்லி திரவம் அடங்கிய போத்தல்கள் அடங்கிய பெருந்தொகைப் பொருட்கள் தலவில கடற்கரையில் வைத்து கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையினரால் கற்பிட்டி, தலவில கடற்கரைப் பகுதியில் இன்று (20) முற்பகல் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான 16 பொதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அந்தப் பொதிகளுக்குள் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 591 கிலோகிராம் உலர் இஞ்சித் துண்டுகள், 75 கிலோகிராம் ஏலக்காய் மற்றும் பூச்சிக்கொல்லி திரவம் அடங்கிய 300 போத்தல்கள் என்பன கண்டெடுக்கப்பட்டன.
இதற்கமைய, கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட இந்தப் பொருட்கள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.