பயணப்பையில் மீட்கப்பட்ட சடலம்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்
சீதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிதிகொட பிரதேசத்தில் தடுகம் ஓயா கரையில் நீலநிற பயணப் பையொன்றில் இடப்பட்டு வீசப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அண்மையில் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சிதைந்த சடலம் தொடர்பான விசாரணையின்போது சீதுவை பொலிஸாருக்கு மேலும் தகவல்கள் கிடைத்துள்ளன.
வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்கும் முகவர்
சடலமாக கிடந்தவர் மாரவில பிரதேசத்தில் வசிக்கும் வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்கும் முகவர் என தெரிய வந்துள்ளது.
குறித்த நபர் பலரை வெளி நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி அவர்களிடமிருந்து பணத்தை மோசடி செய்தவர் என விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பலரையும் ஏமாற்றியதால் அவர்களுக்கு பயந்து வசிப்பிடத்தை விட்டுத் தப்பிச் சென்றவர் என தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.