6 வயது சிறுமி துஷ்பிரயோகம்: முன்னாள் சிவில் பாதுகாப்பு பிரதி செயலாளருக்கு நேர்ந்த கதி!
மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவில் பாதுகாப்பு குழுவின் முன்னாள் பிரதி செயலாளர் ஒருவர் 6 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவத்தகம பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் குழு இன்றையதினம் (29-09-2023) அவரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 68 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த சந்தேக நபர் பல ஆண்டுகளாக தாம் வசிக்கும் பிரதேசத்தில் சிவில் பாதுகாப்பு குழுவின் பிரதி செயலாளராக கடமையாற்றி வந்துள்ளார்.
சமீபத்தில் நடந்த புதிய உறுப்பினர் தெரிவில் தான் வகித்த அந்த பதவியை இழந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில், சந்தேக நபர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 6 வயது சிறுமியின் வீட்டிற்கு சென்றுவந்த நிலையில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டிற்கு அமைய, சிறுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமிக்கு மருத்துவ பரிசோதனையை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சாந்தி புஷ்பலதா தலைமையிலான பொலிஸ் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.