அமெரிக்காவின் இரண்டாவது விமானி தொடர்பான ரகசிய தகவல் கசிவு ; கடும் நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப்
ஈரானில் மீட்புப் பணிகளின் போது இரண்டாவது விமானி ஒருவர் சிக்கியிருப்பது குறித்த இரகசியத் தகவலை ஊடகங்களுக்குக் கசியவிட்ட நபரைக் கண்டறியும் பணியில் அமெரிக்க அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முதல் விமானி மீட்கப்பட்ட பிறகு, இரண்டாவது விமானியும் ஈரானில் சிக்கியிருக்கிறார் என்ற செய்தி ஊடகங்களில் வெளியாகும் வரை ஈரான் அரசுக்கு அது தெரியாது என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.

இந்தத் தகவல் கசிந்ததால், அமெரிக்காவின் மீட்பு நடவடிக்கைகள் "மிகவும் கடினமாகிவிட்டது" என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.
அந்தச் செய்தியை வெளியிட்ட ஊடக நிறுவனம், தகவலை வழங்கிய நபரின் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும், இல்லையெனில், அந்த நிறுவனம் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு கருதி அந்த நபரைக் காட்டிக்கொடுங்கள் அல்லது சிறைக்குச் செல்லுங்கள்" என்று அந்த ஊடக நிறுவனத்திடம் கூறப்போவதாக அவர் தெரிவித்தார்.
தகவல் கசியவிட்ட நபரைக் கண்டறிவதில் தனது நிர்வாகம் மிகவும் உறுதியாக இருப்பதாகவும் ட்ரம்ப் கூறினார். ஈரான் உடனான போர்ச் சூழலில் இத்தகைய தகவல் கசிவுகள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் வீரர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் சுட்டிக்காட்டினார்.