இலங்கை மீது விதிக்கப்பட்ட தீர்வை வரி குறித்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் இலங்கை மீது விதிக்கப்பட்ட தீர்வை வரி தொடர்பாக இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று வொஷிங்டனில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைக்காக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தலைமையிலான குழு அமெரிக்கா சென்றுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதிகள் குழு விடுத்த அழைப்பின் அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
இருநாட்டுப் பிரதிநிதிகளும், இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தக தொடர்புகளை விரிவுபடுத்துவது தொடர்பாக அவதானம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தை நாளையும் தொடரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மீது 44 சதவீத தீர்வை வரியை அமெரிக்க ஜனாதிபதி அறிவித்த நிலையில், உடனடியாக நிவாரணம் கோரி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் அமெரிக்க ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.
மேலும் இது தொடர்பாக அமெரிக்காவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை இலங்கைக் குழு நடத்திய நிலையில்,
இந்த பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதாகவும், விரைவில் இரு நாடுகளாலும் இது குறித்த கூட்டறிக்கை ஒன்று வெளியாக்கப்படும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவித்திருந்தார்.
எனினும் தற்போது மீண்டும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.