கடல் கொந்தளிப்பு ; மீனவர்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக, மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் விசேட எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த விடுத்துள்ள அறிக்கையில்,
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், மன்னார் முதல் கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடல் அலைகள் மிக உயரமாக எழும்பும் அபாயம் காணப்படுவதால், காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம் மற்றும் கற்பிட்டி வரையான கடற்பகுதிகளில் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் சிறிய படகுகள் மற்றும் பாரம்பரிய படகுகளின் உரிமையாளர்கள் மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கற்பிட்டியிலிருந்து சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அதிகரிப்பதற்கும் கடல் அலைகள் உயர்வதற்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் கடலுக்குச் செல்லும் முன் வானிலை மற்றும் கடல் நிலைமைகள் தொடர்பான தகவல்களை அவதானமாகப் பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பான சூழ்நிலை நிலவினால் மட்டுமே கடலுக்குச் சென்று தொழிலில் ஈடுபட வேண்டும் என்றும், அபாயகரமான சூழ்நிலைகளில் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் செல்லும் தருணத்திலிருந்து மீண்டும் கரைக்குத் திரும்பும் வரை முழுக் காலப்பகுதியிலும் உயிர்காப்பு அங்கிகளை அணிவது கட்டாயம் என மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் உயிர்காப்பு அங்கிகளை முறையாக அணிந்திருந்த மீனவர்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டதுடன், அவற்றை அணியாத சிலர் தங்களது உயிர்களை இழந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றால் வெளியிடப்படும் வானிலை அறிவிப்புகளை தொடர்ந்தும் கவனத்தில் கொண்டு, தங்களது உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் செயற்படுமாறும் மீனவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.