பிரபல பாடசாலை மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் குளிசைகள்; பொலிஸார் தீவிர விசாரணை
வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் 8 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மூன்று மாணவிகள், காலைக் கூட்டத்தை முடித்துவிட்டு வகுப்பறைக்குத் திரும்பியுள்ளனர். இதன்போது ஒரு மாணவியின் தண்ணீர் போத்தலை அவதானித்தபோது, அதற்குள் ஏதோ ஒரு மாத்திரை கரைந்து நுரை பொங்கிய நிலையில் இருந்துள்ளது.

மாத்திரை கரைந்து நுரை பொங்கிய தண்ணீர்
இதனால் அச்சமடைந்த மாணவிகள், போத்தலில் இருந்த நீரைத் தவிர்த்துவிட்டு, மற்றுமொரு மாணவியின் தண்ணீர் போத்தலில் இருந்த நீரைப் பகிர்ந்து அருந்தியுள்ளனர். தண்ணீரை அருந்தியபோது அதில் அதிக கசப்புத் தன்மை இருப்பதை மாணவிகள் உணர்ந்துள்ளனர்.
உடனடியாக அந்தப் தண்ணீர் போத்தலை சோதித்துப் பார்த்தபோது, அதனுள்ளும் மூன்று மாத்திரைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து உடனடியாக தமது ஆசிரியையிடம் மாணவிகள் முறையிட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மூன்று மாணவிகளையும் பாடசாலை அதிபர் உடனடியாக வென்னப்புவ பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்தினார்.
அங்கு மாணவிகளுக்கு பாரிய உடல்நலப் பாதிப்புகள் ஏதுமில்லை என வைத்தியர்கள் உறுதிப்படுத்தியதையடுத்து, மாணவிகள் மீண்டும் பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டனர். எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவிகள் மூவரும் பின்னர் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மாணவிகளின் தண்ணீர் போத்தல்களில் குளிசைகளை கலவை செய்தது யார்? அதன் பின்னணி என்ன? என்பது குறித்து வென்னப்புவ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.