புற்றுநோயாளிகளின் வங்கிக் கணக்குகளில் திருட்டு: 3 பேருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
புற்று நோயாளர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, அவிசாவளையை வசிப்பிடமாகக் கொண்ட பிரதான சந்தேகநபர் மற்றும் ஜா-எல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இரண்டு பெண்களும் கொழும்பு நீதவான் பிரசன்ன அல்விஸின் உத்தரவின் பேரில் டிசம்பர் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு இன்று (டிசம்பர் 07) காலை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் ஹலவத்த பிரதேசத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரைத் தொடர்பு கொண்டு, நன்கொடை வழங்கக்கூடியவர் எனக் காட்டி அவரது வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் ரூ.5 லட்சம் பணத்தை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
ஒரு பெண் உட்பட மேலும் பல சந்தேகநபர்கள் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (சிஐடி) நடத்திய விசாரணையில், இந்தக் குழு இதேபோன்று வேறு பல வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ. 25 மில்லியன் திருடியுள்ளது தெரியவந்துள்ளது.