ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படம்!
தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையேயான ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் அதனுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் கோப்பர்நிக்கஸ் சென்டினெல் - 2 என்ற தனது செயற்கைக் கோள் வழியாக எடுக்கப்பட்ட ராமர் பால புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
இந்தியாவை இலங்கையுடன் இணைத்த நிலத்தின் எச்சங்கள்
அந்த புகைப்படத்துடன் “ராமர் பாலம் அல்லது ராம சேது என்றும் அழைக்கப்படும் ஆதாமின் பாலம், இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள ராமேசுவரம் தீவு மற்றும் இலங்கையின் வடமேற்கு கடற்கரையில் உள்ள மன்னார் தீவு இடையே அமைந்துள்ளது.
ராமர் பாலம் இந்தியப் பெருங்கடலின் நுழைவாயிலான மன்னார் வளைகுடாவை (தெற்கு) வங்காள விரிகுடாவின் நுழைவாயிலான பாக் ஜலசந்தியிலிருந்து பிரிக்கிறது என கூறியுள்ளது.
ராமர் பாலத்தில் இருக்கும் மண் அமைப்புகள் உலர்ந்து காணப்படுகிறது. இங்கு கடலின் ஆழமே ஒன்று முதல் 10 மீட்டர் வரைதான் உள்ளது என ஐரோப்பிய ஏஜென்சி தெரிவித்துள்ளது.
பாலம் எப்படி உருவானது என்பது பற்றி பல கோட்பாடுகள் இருந்தாலும், புவியியல் சான்றுகள்படி இந்த சுண்ணாம்புக் கற்கள் ஒரு காலத்தில் இந்தியாவை இலங்கையுடன் இணைத்த நிலத்தின் எச்சங்கள் என்று புவியியல் சான்றுகள் கூறுகின்றன.