சம்பந்தன் அணியின் பகல் கனவு ஒரு போதும் பலிக்காது!
சம்பந்தன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மிரட்டி, தாம் நினைக்கும் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என பகல் கனவு காணக்கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சு தொடர்பில் மொட்டு எம்.பி சரத் வீரசேகர கூறுகையில்,
நோக்கங்கள் நிறைவேற இடமளிக்க மாட்டோம்
ஜனாதிபதிக்கும் சம்பந்தன் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு பகிரங்கமாக இடம்பெற வேண்டும். அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுக்களில் தமிழ், முஸ்லிம், சிங்களக் கட்சிகள் கலந்துகொள்ள வேண்டும்.
ஒற்றையாட்சியை நீக்கிவிட்டு நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்தும் சமஷ்டி முறையிலான ஆட்சியை வடக்கு – கிழக்கில் நிறுவலாம் என சம்பந்தன் அணியினர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கு இந்தியாவும் ஆதரவு தரும் என அவர்கள் எண்ணுகின்றனர். ஆனால், அவர்களின் இந்த நோக்கங்கள் நிறைவேற நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என அவர் கூறினார்.
அதேசமயம் ஜனாதிபதி ரணிலும் பொதுஜன பெரமுனவின் தீர்மானத்தை மீறி எதையும் செய்யமாட்டார் என்பது எமக்கு நன்கு தெரியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்