சுரேஷ் சலே வாயால் உண்ண மறுப்பதே பிரச்சினை ; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவுக்கு என்று பிரத்தியேகமாக எந்தவொரு விசேட அறையும் தயாரிக்கப்படவில்லை. அங்குள்ள சாதாரண அறையிலேயே அவர் வைக்கப்பட்டுள்ளார் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இந்த அறைகள் 2024 செப்டம்பர் மாதத்திற்குப் பின்னர் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல. இதற்கு முன்னரும் பலர் இந்த விசாலமான அறைகளில் வைக்கப்பட்டிருந்த போதும் எவ்வித முறைப்பாடுகளும் எழுந்திருக்கவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உயிராபத்து இல்லை
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (23) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அவருக்கு உணவு வழங்கப்படாமை இங்கு பிரச்சினையல்ல, மாறாக அவர் வாயினால் உணவு உட்கொள்ள மறுப்பதே பிரதான பிரச்சினையாகும். எனினும் தேசிய வைத்தியசாலையில் அவருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அவர் தற்போது சுயநினைவுடன் நடமாடுவதுடன், தனது ஆடைகளையும் அவரே அணிந்துகொள்கின்றார்.
தொழிலதிபர் திருமணத்திற்காக அரண்மனை, சொகுசு விமானங்கள் ; போட்டோ-ஷூட்டில் வருங்கால மனைவி கொடுத்த ட்விஸ்ட்
வாயினால் அன்றி, மூக்கின் ஊடாக இடப்பட்டுள்ள குழாய் வழியே உணவு நேரடியாக அவரது வயிற்றுக்குச் செலுத்தப்படுவதால் அவருக்குரிய ஊட்டச்சத்துக்கள் சரியாகக் கிடைக்கின்றன.
அவருக்கு வீட்டிலிருந்தும் உணவு கொண்டுவந்து கொடுக்கப்படுவதுடன், அந்த அளவு போதாது எனின் இன்னும் கூடுதலாகக் கொண்டுவந்து தருமாறு அவரது மனைவியிடம் கூற முடியும்.
அவ்வாறு கொண்டுவரப்படும் உணவை அவரது மனைவியே அந்தக் குழாய் வழியாக அவரது வயிற்றுக்குள் செலுத்துகின்றார். அதன் அடிப்படையில் அவர் எவ்வித பிரச்சினையும் இன்றி இருப்பதால், அவரது உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை.
அவர் உணவு உட்கொள்ளாமல் இருப்பதற்காக வெளியே மேடைகளை அமைத்தோ, கூட்டங்கள் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தியோ அல்லது பூஜைகளை நடத்தியோ எந்தவொரு பயனும் இல்லை.
வெளியே பதாகைகளைக் கட்டுவதை விடுத்து அவரது மனைவியும் பிள்ளைகளும் அவரிடம் சென்று உணவை உட்கொள்ளுமாறு கூறினால் இந்தப் பிரச்சினை உடனடியாக முடிவுக்கு வந்துவிடும்.
நாட்டில் இடம்பெற்ற மிகக் கொடூரமான கொலைச் சம்பவங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
எனவே, அந்த குற்றப் புலனாய்வு விசாரணை செயல்முறைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதே ஒரு பிரஜையின் பொறுப்பாகும். எனவே அதற்கமைய அவர் செயற்பட வேண்டும் என்றார்.