12 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் ஒன்று! ஏற்படவுள்ள பாரிய பாதிப்பு
உக்ரைன் மற்றும் ரஷ்யா போரினால் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அதிகம் தாக்கத்துக்குள்ளாகும் 12 நாடுகளின் பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் போரினால் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அதிகம் தாக்கத்துக்குள்ளாகும் 12 நாடுகளை, ஐ.நா.வின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழு (UNESCAP) பட்டியலிட்டுள்ளது.
இதன்படி, பட்டியலிடப்பட்டுள்ள 12 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் ஒன்றாகும்.
இலங்கையுடன் பாகிஸ்தான், ஆர்மேனியா, கம்போடியா, ஜோர்ஜியா, கஸகஸ்தான், மாலைதீவு, சமோவா, சொலமன் தீவுகள், தஜிகிஸ்தான், வனாட்டு ஆகியன நாடுகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்த நாடுகள் தமது பொருளாதார கட்டமைப்பு மற்றும் சூழ்நிலைகள் காரணமாக எரிபொருட்கள் மற்றும் உணவுகளின் விலை அதிகரிப்பு, குறைந்தளவு வெளிநாட்டு நிதி வரவுகள், நிதியியல் செலவு அதிகரிப்புகள் முதலியன காரணமாக மேலும் பாதிக்கப்படலாம் என அந்த ஆணைக்குழு அச்சம் தெரிவித்துள்ளது.
கம்போடியா, பாகிஸ்தான், சொலமன் தீவுகள், வனாட்டு ஆகியன ஏனைய ஆசிய – பசுபிக் பிராந்திய நாடுகளைவிட எரிபொருள் விலையேற்றத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
பாகிஸ்தான், இலங்கை ஆகியனவற்றின் வெளிநாட்டுக் கடன்கள், மற்றும் கடன் சேவை விகிதம் உச்சநிலை பெறுமானத்தை விஞ்சியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.