முடிவுக்கு வருகிறதா உக்ரைன் - ரஷ்யா போர்? இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை மும்முரம்
தற்போது போரில் ஈடுபட்டு வரும் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே, போர் நிறுத்தம் தொடர்பாக இன்று புதன்கிழமை (02-03-2022) மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இரு நாடுகளுக்கு இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடக்குமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே பெலாரஸ் நாட்டில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படாத நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.
முதற்கட்ட பேச்சுவார்த்தையில், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் ரஷ்யா மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் 2ஆவது பெரிய நகரமான கார்கிவ் மீது குண்டுகள் வீசப்பட்டதில் அங்குள்ள அரசு கட்டடங்கள் தாக்கப்பட்டுள்ளன.
உக்ரைன் தலைநகர் கீவ்விலும் தாக்குதல் நடைபெறும் நிலையில் நகரின் மையத்திலிருந்து வடக்கு திசையில் சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் தொடங்கி 64 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரஷ்ய பீரங்கிகளும் கவச வாகனங்களும் ஆயுதங்களுடன் கூடிய ராணுவ வாகனங்களும் அணிவகுத்து நிற்கும் செயற்கைக்கோள் காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து நாட்டை காக்க, போர் தொடரும் என்று ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார்.
ராணுவ நிலைகள் மற்றும் ஆயுதங்கள் உள்ள இடங்களை மட்டுமே ரஷ்ய ராணுவம் தாக்குவதாகவும் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இலக்கை எட்டும்வரை போர் தொடரும் என்றும், பின்வாங்க போவதில்லை என்றும் ரஷ்யா கூறியுள்ளது.