ரஷ்யா தாக்குதல் : உக்ரைனில் 3 குழந்தைகள் உட்பட 198 பேருக்கு நேர்ந்த சோகம்! நீடிக்கும் பதற்றம்
ரஷ்யா நட்த்திய தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 198 பேர் இதுவரை உயிரிழந்திருப்பதாக உக்ரைன் சுகாதார மந்திரி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் நாட்டின் எல்லையில் லட்சக்கணக்கான படை வீரர்கள் மற்றும் போர் தளவாடங்களை குவித்தது. இதேவேளை, போரை தவிர்க்க ரஷ்யாவிடம் ஐ.நா. அமைப்பு வேண்டுகோள் வைத்தது.
இருப்பினும், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய படைகளுக்கு விளாடிமிர் புதின் (Vladimir Putin) உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷ்ய படைகள் தாக்க தொடங்கின.
கடந்த 24ஆம் திகதி 200க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷ்யா நடத்தியுள்ளது என்று உக்ரைன் எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். ரஷ்யாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறினார்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (25-02-2022) 2வது நாளாகவும் போர் நீடித்தது. இதில், ரஷ்ய தரப்பில் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 30க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டு விட்டன. ரஷ்ய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர் என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
இந்த நிலையில், 3வது நாளான நேற்று சனிக்கிழமை (26-02-2022) உக்ரைனின் 211 ராணுவ நிலைகளை இலக்காக கொண்டு அழித்துள்ளோம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இருப்பினும், உக்ரைன் ராணுவ தாக்குதலில், ரஷிய படையை சேர்ந்த 1,000 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று உக்ரைன் ராணுவம் அறிவித்து உள்ளது.
ரஷ்யாவின் தாக்குதலில், 10 ராணுவ அதிகாரிகள் உள்பட 137 வீரர்களை இழந்துள்ளோம் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறியுள்ளார். ஆனால், ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு பற்றி அந்நாட்டு ராணுவம் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், உக்ரைன் சுகாதார மந்திரி விக்டர் லையாஷ்கோ முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், 3வது நாளாக தொடர்ந்து நடந்து வரும் போரில் 1,115 உக்ரைனியர்கள் காயமடைந்து உள்ளனர்.
அவர்களில் மொத்தம் 33 பேர் குழந்தைகள். ரஷ்யா தொடுத்துள்ள போரில் 3 குழந்தைகள் உள்பட 198 பேரை இதுவரை இழந்துள்ளோம் என தெரிவித்து உள்ளார்.