பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருக்க அனுமதியளித்த உக்ரைன்!
உக்ரைனில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டு பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருக்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவந்துள்ளது.
ரஷ்யாவால் தனி நாடுகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளைத் தவிர, உக்ரைன் தனது அனைத்து பிரதேசங்களிலும் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
அவசரகால நடவடிக்கை 30 நாட்களுக்கு நீடிக்கும். தேவைப்பட்டால் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டம் உக்ரைன் நாடாளுமன்றத்தால் முறையாக அங்கீகரிக்கப்பட வேண்டும். வரும் நாட்களில் வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, உக்ரைன் 2 இலட்சம் ரிசர்வ் படைகளை திரட்ட ஆரம்பித்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் படையில் இணைபவர்கள் ஒரு வருடம் பணியாற்ற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொதுமக்கள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல அனுமதி வழங்க உக்ரைன் நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது உக்ரேனியர்கள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்லவும், தற்காப்புக்காக செயல்படவும் அனுமதி அளிக்கும் சட்ட வரைவுக்கு உக்ரைன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
“உக்ரைன் குடிமக்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் ஆபத்துகள்” காரணமாக இந்த சட்டம் தேவைப்பட்டது” என உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.