மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைத்த பல்லாயிரம் மில்லியன் ரூபா
மட்டக்களப்பு மாவட்டத்தில் 8,130 மில்லியன் ரூபா பெறுமதியான 2,077 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்தி குழுவின் புதிய தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று (11) மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரனின் ஒருங்கமைப்பில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக அமைச்சர் அறிவித்தார்.
மாவட்ட ஒருங்கினைப்பு குழு
இதன் போது அவர் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இதன்போது முன்னேற்ற மீளாய்வு செய்யப்பட்டதுடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கான முன்மொழிவுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சுற்றாடல், வீதிகள் பாலங்கள் அமைத்தல், யானை வேலி அமைத்தல், உரம் வழங்கள், அரச மருந்தகம் அமைத்தல், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இடப்பற்றாக்குறை, காணி பிரச்சினைகள், மேய்ச்சல்தரை பிரச்சினை, ஆளணியினர் பற்றாக்குறை, குடிநீர் வழங்கல், உட்பட்ட பல திணைக்களங்கள் சார் விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது.
இதன் போது முக்கியமாக காணப்படும் மக்கள் நலப்பணிகளை தெரிவு செய்து துரித கதியில் நிறைவு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அதேவேளை விவசாய குழு, கைத்தொழில் குழு, போக்குவரத்து குழு, சுற்றாடல் குழு ஆகியன நான்கு குழுக்களும் மாதாந்தம் கலந்துரையாடி தீர்வுகள் காணப்பட வேண்டும் என்பதுடன் குறித்த கூட்டறிக்கைகள் மாவட்ட ஒருங்கினைப்பு குழுகூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.