யாழில் கும்பாபிஷேக திருவிழாவில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம்....கைதான இருவர்
யாழ்ப்பாணம் தெல்லிப்பளைஸ்ரீ துர்காதேவி ஆலயத்தின் ஐந்தாம் கோபுரமான இராஜகோபுர கும்பாபிஷேக விழாவில் பக்தர்களிடம் நகைகளை திருடிய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி சாந்தபுரத்தைச் சேர்ந்த நால்வர் திருட்டில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படும் நிலையில், அவர்களில் இருவர் கைதுசெய்யப்பட்டதோடு தலைமறைவாக இருந்த இரு பெண்கள் தேடப்பட்டு வந்தனர்.
தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலயத்தின் ஐந்தாம் கோபுர ராஜகோபுர கும்பாபிஷேக விழா இன்று காலை இடம்பெற்றது.
திருவிழாவில் பங்கேற்ற அடியவர்கள் நால்வரிடம் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டதுடன், மூதாட்டி ஒருவரிடம் தங்கச் சங்கிலி அச்சுறுத்தி பறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து நகைகளைப் பறிகொடுத்த நால்வரும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். அதனடிப்படையில் விசாரணைளை முன்னெடுத்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் ஆண்கள் இருவரை கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி சாந்தபுரத்தைச் சேர்ந்த 33 மற்றும் 37 வயதுடைய இருவரும் வான் ஒன்றில் வருகை தந்துள்ளதாக கூறப்படும் நிலையில், கொள்ளைக்கு உதவி பெண்கள் இருவர் தலைமறைவாகியுள்ளனர். இந்நிலையில் அவர்களைத் தேடும் பணி பொலிஸாரினால் முன்னெடுக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் பயணித்த வான் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேவேளை, சந்தேக நபர்களிடமிருந்து கைச்சங்கிலி ஒன்றும் சங்கிலி ஒன்றும் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.