அதிக விலைக்கு அரிசி விற்பனை ;300,000 ரூபா அபராதம்
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதல் விலைக்கு அரிசியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இரு வர்த்தகர்களுக்கு மொத்தம் 300,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தால் வெல்லவாயவைச் சேர்ந்த இரு வர்த்தகர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு விலை ஒரு கிலோகிராம் 260 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஐந்து கிலோகிராம் கீரி சம்பா அரிசிப் பொதி ஒன்றை ஒரு கிலோகிராம் 350 ரூபாவிற்கு விற்ற வர்த்தகர் ஒருவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 150,000 ரூபா அபராதம் விதித்தது.
மற்றொரு வழக்கில், இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா ஜி.ஆர்11 அரிசியை, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையான ஒரு கிலோகிராம் 240 ரூபாவுக்கும் அதிகமாக, ஒரு கிலோகிராம் 260 ரூபாவிற்கு விற்ற வெல்லவாயவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட அந்த வர்த்தகருக்கும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தால் 150,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.