ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணம் திருத்தியமைப்பு
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை திருத்தியமைத்து புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (10) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
திருத்தி அமைக்கப்பட்ட விதிமுறைகள்
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் (அத்தியாயம் 203.) பிரிவு 44, 123, 124, 125, 126, 126B, 128, 132, 132 A மற்றும் 231 உடன் படிக்கப்பட்ட பிரிவு 237 இன் கீழ் விதிமுறைகளை திருத்தியுள்ளார்.
இதன் கீழ், 2009 மார்ச் 26 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2009 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சாரதி அனுமதிப்பத்திர ஒழுங்குமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
புதிய அதிவிசேட வர்த்தமானியின் அடிப்படையில் ஒரு வகுப்பிற்கான கற்றல் அனுமதி மற்றும் புதிய ஓட்டுநர் உரிமத்திற்கான விண்ணப்ப கட்டணம் சாதாரண சேவையின் கீழ் 2,500 ரூபா ஒரு நாள் சேவையின் கீழ் 3,500. ரூபாவாக திருத்தப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு வகுப்புகளுக்கு சாதாரண சேவையின் கீழ் கட்டணம் 3,000 ரூபா மற்றும் ஒரே நாள் சேவைக்கு 4,000 ரூபாவாக அறவிடப்படும் என கூறப்பட்டுள்ளது.