தடை செய்யப்பட்ட பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தொடர்பில் வௌியான தகவல்
இலங்கையில் திட்டமிட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களைத் தடை செய்வதற்கும், அவற்றை அரசுடமையாக்குவதற்குமான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார்.
நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

அரசுடமையாக்க நடவடிக்கை
கடந்த மற்றும் நடப்பு ஆகிய இரண்டு ஆண்டுகளுக்குள் 354 பவுன் தங்கம், 77 வாகனங்கள், 35 கோடி ரூபா பணம் மற்றும் ஒரு கோடியே நூற்று ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான பல்வேறு சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதில் 2024ஆம் ஆண்டில் மாத்திரம் 150 பவுன் தங்கம், 64 வாகனங்கள், 6 கோடி ரூபா பணம் மற்றும் 61 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அரசுடமையாக்குவதற்காகத் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், இந்த ஆண்டில் (2025) இதுவரை 204 பவுன் தங்கம், 13 வாகனங்கள், 67 கோடியே 78 இலட்சம் ரூபா பெறுமதியான காணி மற்றும் ஏனைய சொத்துக்கள், மற்றும் 18 வீடுகள் எனச் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பெருமளவிலான சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.