பருத்தித்துறை பிரதேச சபையில் பிரஜா சக்திக்கு எதிராக தீர்மானம்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச சபையில் பிரஜா சக்திக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபை மாதாந்த அமர்வு இன்றைய தினம் தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் நடைபெற்றது .
இதன் போது, பிரஜா சக்திக்கு எதிராக தீர்மானம் ஒன்றினை தவிசாளர் சபையில் முன் வைத்தார்.

சபையில் கடும் வாத பிரதிவாதங்கள்
அதனை அடுத்து சபையில் கடும் வாத பிரதிவாதங்கள் நடைபெற்ற நிலையில் , தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, பிரஜா சக்திக்கு எதிராக 10 உறுப்பினர்களும் , ஆதரவாக 4 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
அத்துடன், 05 உறுப்பினர்கள் நடுநிலை வகித்த நிலையில் ஒரு உறுப்பினர் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை. பருத்தித்துறை பிரதேச சபை 20 உறுப்பினர்களை கொண்டது.
அதில் பிரஜா சக்திக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு தமிழரசு கட்சியின் 09 உறுப்பினர்களும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினரும் ஆதரவாக வாக்களித்தனர். தேசிய மக்கள் சக்தியின் 4 உறுப்பினர்கள் , பிரஜா சக்திக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் 4 உறுப்பினர்களும் , சுயேச்சை குழுவின் ஒரு உறுப்பினரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது நடுநிலை வகித்துள்ளனர். அதேவேளை சுயேச்சை குழுவை சேர்ந்த ஒருவர் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.