வெடுக்குநாறிமலை தொடர்பில் முன்வைக்கபட்ட கோரிக்கை!
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்துக்கான நிலம் மற்றும் பாதையை விடுவித்துத் தருமாறு வடக்கு மாகாண ஆளுனர் நா.வேதநாயகனுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய திகதி (5) குறிப்பிடப்பட்டு அக்கடிதம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் ,

ஆலய அறங்காவலர் சபையினர் கோரிக்கை
வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வரலாற்று தொன்மைமிக்க வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் வழிபாட்டு செயற்பாடுகளுக்காக ஆலயம் அமைந்துள்ள பகுதியின் ஒரு ஏக்கர் காணியினை ஆலயத்திற்கு விடுவித்துத் தர ஆவன செய்யுமாறு ஆலய அறங்காவலர் சபையினர் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பிலான கோரிக்கையினை ஏற்கனவே தங்களுக்கு தாம் விடுத்துள்ளதாகவும் எனினும் எதுவித திருப்திகரமான பதிலும் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த ஆலயத்திற்கு செல்லும் பாதையினை வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு விடுவித்துத் தரும் பட்சத்தில் குறித்த பாதையினை தம்மால் புனரமைக்க முடியும் என வவுனியா வடக்கு பிரதேச சபையினரும் தெரிவித்துள்ளனர்.
எனவே தாங்கள் இவ்விடயத்தில் நேரடியாக தலையீடு செய்து குறித்த வரலாற்று தொன்மைமிக்க ஆலயத்திற்கான காணி மற்றும் பாதையினை மிக விரைவில் விடுவித்துத் தர ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தின் பிரதிகள் வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர், வெடுக்குநாறிமலை ஆலய அறங்காவலர் சபையினருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.