யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் பரவும் செய்திகள் ; மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான செய்திகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் இடம்பெற்ற தீ விபத்துத் தொடர்பில் நிர்வாகத்தினால் இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

முதற்கட்ட விசாரணை
இது குறித்து ஊடகங்களும் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,மருத்துவமனைக்கு வெளியே உள்ள அதிகாரிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த குழு, அனர்த்தம் ஏற்பட்ட விதம் குறித்து முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அத்துடன், மருத்துவமனை மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள உள்வாரி குழு, விபத்திலிருந்து மீட்கப்பட்ட மருந்துகளை கணக்கெடுத்தல், சேதமடைந்த மருந்துகளின் பெறுமதி மற்றும் களஞ்சியசாலை சேத விபரங்களை மதிப்பீடு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
சம்பவம் நடைபெற்ற பகுதி தற்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது தொடர்பான தடயவியல் விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றுமுன்தினம் கொழும்பில் இருந்து வருகை தந்த அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகளும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கபில சந்திரசேன மரணத்திற்கு முதல் நாள் இரவு நடந்தது இது தான் ; இறுதியில் கூறிய வார்த்தை ; வெளியான பகீர் தகவல்
விசாரணைகள் நிறைவடைந்ததும் அதன் முழுமையான அறிக்கைகள் சுகாதார அமைச்சுக்கும் ஏனைய சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் அனுப்பி வைக்கப்படும் என பணிப்பாளர் குறிப்பிட்டார்.
மருத்துவமனையில் மருந்துகள் தட்டுப்பாடு நிலவுவதாகவும், மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பரப்பப்படும் செய்திகளில் உண்மையில்லை என பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
மருத்துவமனையின் சேவைகள் அனைத்தும் தடையின்றி வழமை போல் நடைபெற்று வருகின்றன. நிரந்தரமான மருந்து களஞ்சியசாலை ஒன்றை அமைத்து தருமாறு சுகாதார அமைச்சிடம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.