உதயரூபனை இடம்மாற்றுங்கள்; பெற்றோர்கள் போர்க்கொடி
மட்டக்களப்பு இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் உதயரூபனை, பாடசாலையில் இருந்து இடம்மாற்றுமாறு கோரி, மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அப்பாடசாலையின் பழைய மாணவர்கள், பாடசாலைக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு சிவானந்தா தேசிய ஆண்கள் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றிவரும் மட்டக்களப்பு இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் உதயரூபன், தொழிற்சங்கம் என்ற பேர்வையில் பாடசாலையில் மாணவர்களுக்கு கற்பிப்பதில்லை என பெற்றோர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
இதன் காரணமாக மாணர்களின் எதிகாலம் கேள்விக்குரியாகியுள்ளதாக தெரிவித்து குறித்த ஆசிரியரை இடமாற்றுமாறு கோரி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இதில் மட்டக்களப்பு மாநகர சபை மேஜர் ரி.சரவணபவான் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது “வேண்டாம், வேண்டாம் உதயரூபன் வேண்டாம்”, “ஆசிரியர் ஸ்தானத்துக்கு தகுதியற்ற உதயரூபனை வெளியேற்று”, “கல்வி கற்பிக்காத உதயரூபன் வேண்டாம்” மற்றும் “வலையக் கல்விப் பணிப்பாளரே உதயரூபனின் அடாவடித்தனத்தை நிறுத்து” போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், உதவி கல்விப் பணிப்பாளர் ரவிச்சந்திராவிடம் மகஜரைக் கையளித்த பின்னர் அங்கிருந்து விலகிச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.