2027 ஆம் ஆண்டுக்கான பாடசாலை அட்டவணை வெளியீடு
நாட்டில் 2027 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணைக் காலங்கள், அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய பொதுப் பரீட்சைகளுக்கான கால அட்டவணையை உள்ளடக்கிய சுற்றறிக்கை இலக்கம் 31/2026 ஐ கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 2027 ஆம் ஆண்டில் அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் பொது விடுமுறைகள் மற்றும் பரீட்சை நாட்களைக் கருத்தில் கொண்டு மொத்தம் 197 நாட்கள் கற்றல் நடவடிக்கைகளுக்காக இயங்கும்.

197 நாட்கள் கற்றல் நடவடிக்கை
சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி வரையும், இரண்டாம் தவணை ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 30 ஆம் திகதி வரையும், மூன்றாம் தவணை ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி வரையும் நடைபெறும்.
முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் மற்றும் இரண்டாம் தவணைகள் பிரத்யேகக் நாட்காட்டியின்படி பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படும். 2027 ஆம் ஆண்டிக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏதேனும் விசேட காரணங்களுக்காக ஏதேனும் ஒரு பாடசாலை நாள் இரத்துச் செய்யப்பட்டால், குறித்த 197 பாடசாலை நாட்களையும் பூர்த்தி செய்வதை உறுதிசெய்யும் வகையில் ஈடுசெய்யும் வகுப்புகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.