பேரிடரால் காணமல் போன, இறந்து போனவர்கள் தொடர்பில் பதிவாளர் திணைக்களம் வெளியிட்ட தகவல்
தித்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்பைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த அனர்த்தம் காரணமாக ஒரு நபர், உறவினர் அல்லது நண்பர் காணாமல் போனவராக அறிவிக்கப்பட்டால், அவ்வாறு காணாமல் போனவர்களின் இறப்பைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்டக் கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

மரணப் பதிவு
தேசிய அனர்த்தப் பகுதிகள் மற்றும் நிர்வாக மாவட்டங்களில் மரணப் பதிவு தொடர்பான தற்காலிக ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ், டிசம்பர் 2 ஆம் திகதி ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
அதற்கமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இந்த ஒழுங்குமுறையின் கீழ், காணாமல் போன ஒருவரின் மரணத்தைப் பதிவு செய்ய விண்ணப்பிக்கும் எவரும், சம்பந்தப்பட்ட விவரங்கள் மற்றும் உண்மைகளை உறுதிப்படுத்தும் பிரமாணப் பத்திரத்துடன் விண்ணப்பப் படிவத்தை, காணாமல் போனவர் வழமையாக வசித்த பகுதியின் கிராம அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன்பின்னர் கிராம அலுவலர் அந்த விண்ணப்பத்தை பிரதேச செயலாளருக்கு அனுப்புவார்.
பிரதேச செயலாளர், ஆட்சேபனைகளுக்காக அந்த விண்ணப்பத்தை பிரதேச செயலகத்திலும் சம்பந்தப்பட்ட கிராம அலுவலர் அலுவலகத்திலும் இரண்டு வாரங்களுக்கு காட்சிப்படுத்த வேண்டும்.
ஆட்சேபனைகள் எதுவும் எழுப்பப்படாவிட்டால், பிரதேச செயலாளர் அந்த விண்ணப்பத்தைப் பதிவாளர் நாயகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய பிரதி அல்லது உதவிப் பதிவாளர் நாயகத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆட்சேபனைகள் சமர்ப்பிக்கப்பட்டால், ஒரு விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஒழுங்குமுறையின் கீழ், காணாமல் போனமைக்கான சான்றிதழ் கோரப்பட்டால், விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சரியான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
அதன் பின்னர், பிரதேச செயலாளர் காணாமல் போனதை உறுதிப்படுத்தும் சான்றிதழை வழங்குவார் என்றும் பதிவாளர் நாயகம் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.