வவுனியாவில் 130 வர்த்தக நிலையங்களிற்கு சிவப்பு அறிவித்தல்
வவுனியா நகரசபையினால் நிலவாடகை செலுத்தாத 130 வர்த்தக நிலையங்களிற்கு சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் நாட்களில் நில வாடகை செலுத்தாத ஏனைய வர்த்தக நிலையங்களிற்கும் இந்நடவடிக்கை தொடரவுள்ளதாகவும் வவுனியா நகரசபை தெரிவித்துள்ளது.
வவுனியா நகரசபையின் கீழ் 447 கடைகள் காணப்படுகின்றன.
2022ம் ஆண்டு முதல் வாடகை செலுத்தவில்லை
இவற்றில் கடந்த 2022ம் ஆண்டு தொடக்கம் பல வர்த்தக நிலையங்கள் நில வாடகை செலுத்தாத நிலையில் நகரசபையினால் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் முதற் கட்டமாக கடந்த 05ம் திகதி 86 கடைகளும், இன்றையதினம் 44 கடைகளுக்கும் சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.
அதேவேளை நகரசபையின் அனுமதியின்றி சிவப்பு அறிவித்தலினை அகற்றியமைக்காக வர்த்தக நிலையங்களின் மீது வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நடவடிக்கையின் மூலமாக இதுவரை 3,806,921 ரூபாய் பணம் வருவாயாக நகரசபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
குறிப்பாக வவுனியா நகரசபையினால் வர்த்தக நிலையங்களிற்கு 500 தொடக்கம் 6000 ரூபாய் வரையே வாடகை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை 2022இல் இருந்து செலுத்தாத காரணத்தினாலேயே வர்த்தக நிலையங்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.