அடுத்த 24 மணிநேரத்திற்கு மீண்டும் சிவப்பு அறிவிப்பு
நாட்டில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வானிலை ஆய்வு மையம் சிவப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்பகுதி மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்
இதன்படி, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன், அப்பிரதேசத்தின் கடற்பகுதி மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் மறு அறிவித்தல் வரை இந்த கடற்பரப்பில் பயணிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஏனைய கடற்பரப்புகளில் கடல் அலையின் உயரம் 2.5 – 3 மீற்றர் வரை உயரலாம் என அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேவேளை சீரற்ற காலநிலையால் கல்பிட்டி, கொழும்பு, காலி முதல் மாத்தறை வரை கடல் அலைகள் நிலத்தை நோக்கி வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.