கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ரணில் விக்ரமசிங்க அனுமதி
சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (22) பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
சிறைச்சாலை வைத்தியர்கள் தீர்மானம்
இந் நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதோடு உடல்நலக்குறைவு காரணமாக ரணில் விக்ரமசிங்கவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு சிறைச்சாலை வைத்தியர்கள் தீர்மானித்த நிலையில் ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.