தலைவிரித்தாடும் உணவுப் பஞ்சம்; மக்களுக்கு அதிரடி உத்தரவிட்ட கிம்!
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் (kim jong un) தன் நாட்டு மக்களை 2025 ஆம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என அதிரடி உத்தரவொன்றை பிறப்பித்துள்ளமை உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட கொரியாவில் கடுமையான உணவுப் பஞ்சம் நிலவும் நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் வட கொரியா தனது நாட்டுடனான வெளிநாட்டு எல்லைகளை மூடியுள்ளது. அதில் குறிப்பாக உணவுப் பொருட்கள், எரிபொருள் என மிகவும் அத்தியாவசியத் தேவைகளுக்காக சார்ந்திருந்த சீன எல்லையையும் கூட மூடியுள்ளது.
இதனால் அங்கு ஒரு கிலோ வாழைப்பழத்தின் 45 டொலர், 32 யூரோவாக இருக்கிறது. (இலங்கை ரூபாவில் 9,000, இந்திய ரூபாயின் 3,300) இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற கிம்மின் உத்தரவு மக்களை மேலும் வதைப்பது போல் உள்ளதாக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
வட கொரிய மக்களும் தற்போது நிலவும் உணவுப் பஞ்சமானது வரும் குளிர் காலத்தைக் கூட கடக்க முடியாத அளவுக்குக் கடுமையாக இருக்கிறது. இவ்வாறான நிலையில் , 2025 வரை எப்படி குறைவாக உண்ண உத்தரவிட்டால் எப்படி எனத் தவிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வட கொரியாவின் சினுயிஜு நகர வாசி அரசாங்கத்தின் புதிய விதிமுறைகள் பற்றிக் கூறுகையில்,
“2025 வரை அரசாங்கம் குறைவாக உணவு உண்ணச் சொல்கிரது. இப்போதே உணவுக் கையிருப்பு நிலை மிகவும் மோசமாக உள்ளது. அன்றாடம் பற்றாக்குறையால் கடுமையாகத் தவிக்கிறோம். எங்களுக்கு இதனை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை.
வெறுமையும், அவநம்பிக்கையும் தான் உள்ளதாக தெரிவித்தார். அதோடு அரசாங்கம் எங்களுக்குத் தேவையான தானியங்களை நாங்களே உற்பத்தி செய்யுமாறு ஊக்குவிக்கிறது. ஆனால் அது அவ்வளவு எளிதானது இல்லை.
2025 வரை இதைத் தாங்கிக் கொள்ளச் சொல்வதும், பட்டினியில் சாகச் சொல்லவதற்கு சமம்” என்றும் அவர் கூறினார். வெளிநாட்டு ஊடகத்துக்குப் பேட்டியளித்த அந்த நபர் தனது அடையாளத்தை வெளிப்படுத்திவிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
ஆனால், அரசுத் தரப்போ வட கொரியா கொரோனாவைக் கட்டுப்படுத்தவே எல்லைகளை மூடியயதாகவும், அதன் பலனை வட கொரியா அடைந்துள்ளதுபோல் உணவுப் பஞ்சத்தையும் சமாளித்துக் கடந்து வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை வடகொரியா தனது உள்நாட்டு விடயங்கள் அனைத்தையுமே இராணுவ ரகசியம் போல் பாதுகாக்கும். அங்கு என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை உலக நாடுகள் அவ்வளவு எளிதில் அறிந்துகொள்ள முடியாது என்பதுடன் ஊடகங்களும் அரசுக் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றன.
கொரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைக்கும்போதும் கூட அங்குள்ள தொற்று நிலைவரம் குறித்து உண்மையான விவரம் உலகுக்குத் தெரியவரவில்லை. ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாயக் கழகம் வெளியிட்டுள்ள குறிப்பில்,
“வடகொரியா தனது உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யாவிட்டால் ஆகஸ்ட் தொடங்கி அக்டோபருக்குள் நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும்” என ஏற்கெனவே எச்சரித்திருந்தது.
இதேவேளை வடகொரியாவில் பொருளாதாரம் ஏற்கெனவே ஆட்டம் கண்டுள்ளது. அணுஆயுதப் பரிசோதனைகள் அந்நாட்டுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்துள்ள நிலையில் தற்போது உணவுப் பஞ்சமும் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேசமயம் 1990களில் சோவியத் யூனியன் சுக்கு நூறாக நொறுங்கியது. அதுவரையில் சோவியத் யூனியனை இறக்குமதி பொருட்களுக்காக பெருமளவில் நம்பியிருந்த வடகொரியா , அந்த பெரும் பஞ்சத்தின்போது லட்சக்கணக்கான வடகொரியர்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் இப்போது அப்படியொரு சவாலை மீண்டும் வடகொரியா எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.