நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவின் அதிரடி அறிவிப்பு!
அரசியலில் ராஜபக்சாக்களுடன் இணைந்து செயற்பட வேண்டிய தேவை எமக்கு கிடையாது எனவும், நாங்கள் தனித்து சிறந்த முறையில் செயற்படுகிறோம் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இன்றைய தினம் (15-08-2023) இரத்தினபுரியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிளவுப்படுத்தும் அரசியல் காய் நகர்த்ததை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறமையாக செயற்படுத்துகிறார்.
ராஜபக்சாக்களுடன் ஒன்றிணைய வேண்டிய தேவை எமக்கில்லை. இருப்பவர்களையாவது ராஜபக்சாக்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் மேலவை இலங்கை கூட்டணியின் உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் ஒன்றிணைய கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிடுவது அடிப்படையற்றது.
விலகிச் சென்றவர்கள் மீண்டும் ஒன்றிணையலாம் என பொதுஜன பெரமுன தான் எம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரசியலில் நாங்கள் தனித்து சிறந்த முறையில் செயற்படுகிறோம். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிளவுப்படுத்த ஜனாதிபதி ரணில் சிறந்த முறையில் அரசியல் காய் நகர்த்தலை முன்னெடுக்கிறார்.
அரசாங்கத்தில் அமைச்சு பதவி வகிக்கும் ஒரு தரப்பினர் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவாகவும் அமைச்சு பதவி இல்லாத பிறிதொரு தரப்பினர் பசில் ராஜபக்ஷவுக்கு ஆதரவாகவும் செயற்படுகிறார்கள்.
பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்.
ஆகவே, விலகி சென்றவர்களை மீண்டும் இணைப்பதற்கு முன்னர் இருப்பவர்களை பொதுஜன பெரமுன தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
மக்களால் புறக்கணிக்கப்பட்ட ரணிலை ஜனாதிபதியாக்கி நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு பொதுஜன பெரமுன துணை செல்கிறது.
69 இலட்சம் மக்களாணைக்கும், ஜனாதிபதியின் கொள்கைக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடு காணப்படுகிறது. ஆகவே பொதுஜன பெரமுனவே தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்.