ஐந்தேஐந்து வெளிநாட்டு பயணம்; 40 மில்லியன் செலவாம்!!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் 2021 ஆம் ஆண்டு ஐந்து உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களிற்காக் சுமார் 40 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் வழங்கிய விவரங்களின்படி, இந்த தகவல் தெரியவந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச்சட்டம்
ராஜபக்ச சகோதரர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஐந்து உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்காக மொத்தம் 44, 739,184.91 ரூபாய் செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2022 ஜனவரி 1ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை முதலில் நிராகரிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், இது தொடர்பான மேல்முறையீட்டை பரிசீலித்த இலங்கை தகவல் உரிமை ஆணைக்குழு, கோரப்பட்ட விவரங்களை ஊடகவியலாளர்களிடம் வழங்குமாறு குறித்த அலுவலகங்களுக்கு உத்தரவிட்டது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அலுவலகங்கள் 14 வேலை நாட்கள் அல்லது 21 நாட்களுக்குள் விவரங்களை அளிக்க வேண்டும் எனினும் அவர்கள் பத்து மாதங்களுக்கும் மேலாக எடுத்துக் கொண்டனர்.
வெளியிட்ட விவரங்களின்படி, சுமார் 36 மில்லியன் (ரூ.36, 970,864.14) ரூபாய் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இரண்டு வெளிநாட்டு விஜயங்களுக்காக செலவிட்டுள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மூன்று உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களுக்கு 7 மில்லியன் செலவிட்டுள்ளார். முன்னாள் பிரதமரின் உத்தியோகபூர்வ விஜயங்களுக்கான செலவு மொத்த செலவில் 83 சதவீதமாகும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியூயோர்க், கிளாஸ்கோ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கான தனது விஜயங்களுக்காக 7,768, 320.77 ரூபாய் செலவிட்டுள்ள நிலையில் இந்த பயணங்கள் நோக்கம் ஜனாதிபதி செயலகத்தால் விளக்கப்படவில்லை.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, பங்களாதேஷ் மற்றும் இத்தாலிக்கு விஜயம் செய்ததுடன் அங்கு இடம்பெற்ற மாநாட்டில் அவரது குடும்ப உறுப்பினர்களில் சிலரும் கலந்துகொண்டதாகவும் தெரிிவிக்கப்படுகின்றது.