100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை சாத்தியம் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை இன்றும் (01) தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள தினசரி வானிலை முன்னறிவிப்பின்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இப்பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகும் சாத்தியமும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாத்தளை, அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிய அளவிலான மழை பெய்யக்கூடும் என்றும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலையே நிலவும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, மேல், சப்ரகமுவ, தென், வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் மேலதிக அறிவிப்புகளை தொடர்ந்து அவதானிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.