மீண்டும் நாட்டில் கொட்டப்போகும் மழை!
இலங்கையின் தெற்கு, பகுதியில் வங்காள விரிகுடாவில் மேற்கு நோக்கி நகரும் அயன சமுத்திர வளித்திணிவுடன் கூடிய காற்றுச் சுழற்சியின் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் தற்போது பலத்த மழை பதிவாகி வருகிறது.
இன்றும் (04) நாளையும் (05) நாளை மறுதினமும் (06) வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் சற்று கனமான மழையும் பெய்யும் வாய்ப்புள்ளது என யாழ் பல்கலைக்கழக புவியியல்பீடத் தலைவரும் வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நா. பிரதீபராஜா வானிலை ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்

அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கனமான மழையும் பெய்யும் வாய்ப்பு
கிழக்கு மாகாணத்தில், நாளை (05) பல பகுதிகளில் கனமழையும் ஒரு சில இடங்களில் மிகக் கனமான மழையும் பெய்யும் வாய்ப்புள்ளது. கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் நாளை மறு தினமும் (06) மிதமானது முதல் சற்றுக் கனமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
நாளையும் (05) நாளை மறுதினமும் (06) மத்திய, ஊவா, மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் அடுத்த மூன்று நாட்களுக்கு (07) வரை கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
இன்று முதல் வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு கரையோரங்களில் காற்றின் வேகம் சற்று அதிகமான வேகத்தில் வீசும் வாய்ப்புள்ளது. குறிப்பாக காற்று 30- 40 கி.மீ. வேகத்தில் வீசும் வாய்ப்புள்ளது.
அதேவேளை வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களின் உள்நிலப்பகுதிகளிலும் காற்றின் வேகம் மணிக்கு 25-35 கி.மீ. வேகத்தில் வீசும் வாய்ப்புள்ளது.
ஆகவே வடக்கு, கிழக்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களில் நெல் அறுவடை மற்றும் நெல் உலர விடும் செயற்பாடுகளில் ஈடுபடும் விவசாயிகள் இந்த மழை நாட்களைக் கருத்தில் கொண்டு செயல்படுமாறும் யாழ் பல்கலைக்கழக புவியியல்பீடத் தலைவரும் வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நா. பிரதீபராஜா அறிவுறுத்தியுள்ளார்.