பணிப்புறக்கணிப்புக்குத் தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்
ரயில்வே திணைக்களத்தில் நிலவும் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய ரயில்வே பொது முகாமையாளர் ஒருவரை அரசாங்கம் துரிதமாக நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு இல்லாவிட்டால், பல ரயில் தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை நிச்சயமாக முன்னெடுப்போம் என அச்சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

பணிப்புறக்கணிப்பு
இந்தப் பணிப்புறக்கணிப்புக்காக வரலாற்றில் முதன்முறையாக ரயில் பயணிகள் சங்கங்களின் ஆதரவும் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுமேத சோமரத்ன மேலும் குறிப்பிட்டார்.
ரயில் தாமதங்கள் உள்ளிட்ட பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தொடர்ந்தும் முறையான தீர்வுகள் கிடைக்கப்பெறாமையால், தமது சங்கமும் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக ஹீந்தெனிய, பட்டிபொட ஐக்கிய ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஆர்.ஏ.ரணதுங்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ரயில்வே திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகப் ரயில்வே தொழிற்சங்கங்களுக்கு நாளை (14) போக்குவரத்துப் பிரதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாளைய தினம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் முறையான தீர்வுகள் கிடைக்கப்பெறாவிட்டால், திட்டமிட்டபடி பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் எனப் ரயில்வே தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.