ரஷ்ய ஜனாதிபதி புடினின் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல் ; உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்த விடயம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இல்லங்களில் ஒன்றின் மீது ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, யுக்ரையின் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி மறுத்துள்ளார்.
முன்னதாக, ரஷ்யாவின் வடமேற்கு நோவ்கோரோட் பகுதியில் உள்ள புடினின் அரசு இல்லத்தின் மீது நீண்ட தூர ஆளில்லா வான்வழி விமானங்களை (UAV) பயன்படுத்தி, கியேவ் இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம் சுமத்தியிருந்தார்.

அமைதிப் பேச்சுவார்த்தை
எனவே அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
எனினும், இந்த கூற்றை "வழக்கமான ரஷ்யப் பொய்கள்" என்று செலென்ஸ்கி நிராகரித்தார், இது யுக்ரைன் மீதான தாக்குதல்களைத் தொடர கிரெம்ளினுக்கு ஒரு சாக்குப்போக்கை வழங்கும் நோக்கம் கொண்டது என்று அவர் கூறியுள்ளார்.
திங்களன்று டெலிகிராமில் பகிரப்பட்ட ஒரு அறிக்கையில், புடினின் இல்லத்தின் மீது ஏவப்பட்டதாகக் கூறிய 91 ட்ரோன்களும் ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறித்து அழிக்கப்பட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் கூறியுள்ளார்.
அத்துடன், தாக்குதலின் விளைவாக உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த எந்த அறிக்கையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.