பெண்களுக்கு போக்குவரத்தில் இடையூறு விளைவித்த இ.போ.ச காப்பாளருக்கு தண்டனை
பொதுப் போக்குவரத்தில் பயணிகளுக்கு, குறிப்பாக பெண்களுக்கு இடையூறு விளைவிப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும், பயணிகள் தமது விருப்பப்படி தமக்கான போக்குவரத்து சேவையை தெரிவு செய்ய முழு உரிமை உண்டு எனவும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பாக எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து தனியார் பேருந்தில் மன்னார் வந்தடைந்த இரு பெண்கள், அங்கிருந்து தலைமன்னார் செல்வதற்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (இ.போ.ச.) சொந்தமான பேருந்தில் ஏற முற்பட்டுள்ளனர்.
எனினும், அவர்கள் முன்னர் தனியார் பேருந்தில் வந்ததைக்காரணம் காட்டி, குறித்த பேருந்தின் காப்பாளர் அவர்களை பேருந்தில் ஏற்ற மறுத்து இடையூறு விளைவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்களின் முறைப்பாட்டை அடுத்து, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை இவ்விடயத்தில் உடனடியாக தலையிட்டது.