மக்களின் பங்களிப்பும் கிடைத்தால் வடக்கில் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கலாம்
வடக்கு கடல் மார்க்கமாக முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் குறித்து அதிக கவனம் செலுத்தி வருவதாக, பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் புத்திக லியனகமகே தெரிவித்துள்ளார்.
கடற்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
போதைப்பொருள் கட்டுப்படுத்தல்
போதைப்பொருள் கட்டுப்படுத்தலில் கடற்படை ஒரு குறிப்பிட்ட ஒத்துழைப்பை மாத்திரமே செய்ய முடியும் என சுட்டிக்காட்டிய பிராந்திய கட்டளைத் தளபதி, பொதுமக்களின் பங்களிப்பும் மிக அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கடல் மார்க்கமாக போதைப்பொருள் கடத்தல் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில், பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், தமக்கு சர்வதேச புலனாய்வுத் தகவல்களும் கிடைக்கப்பெறுவதால் இந்த கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, பொதுமக்களின் பங்களிப்பும் முழுமையாக கிடைக்கப்பெறுமானால் போதைப்பொருள் கடத்தலை முற்றாக ஒழிக்க முடியும் என யாழ்ப்பாண பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் புத்திக லியனகமகே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
