மக்களுக்கு பொது சுகாதார பரிசோதகர் சங்கம் விடுத்த எச்சரிக்கை!
நாட்டில் தற்போது கொரோனா தொற்றுப் பரவலானது அதிகரித்துள்ள நிலையில், சமூக ஒன்றுகூடல் தொற்றுப் பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால், அவசியமில்லாத விழாக்களை நடத்துவதைத் தவிர்க்குமாறு பொதுச் சுகாதார பரிசோதகர் கோரிக்கை விடுத்துள்ளது.
அண்மைய நாட்களில் வழிபாட்டுத் தலங்களில் பலர் ஒன்றுகூடிய சம்பவங்கள் பல பதிவாகியுள்ளதாக அச்சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். அண்மையில் இது போன்ற சம்பவம் தலவாக்கலையில் பதிவாகியதாகவும் அவர் கூறினார்.
தலவாக்கலையில் இவ்வாறான ஒரு நிகழ்வை முன்னெடுப்பதற்குத் தேவையான அனுமதி பெறப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இதேபோன்ற சம்பவங்கள் இதே பகுதியில் இதற்கு முன்னர் பதிவாகியுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட பலரை எச்சரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரிக்கக்கூடிய ஆபத்தான சூழ்நிலையில் நாடு இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
எனவே நாட்டின் நிலையைக் கருத்திற் கொண்டு மதத் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைத்து நபர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.