யாழ் பிரபல வர்த்தக நிலையங்களில் மனித பாவனைக்கு உதவாத பொருட்கள் ; மக்களே அவதானம்!
காலாவதியான பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டிருந்த யாழ் நகர 20 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு 5 லட்சத்தி 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
மாநகரசபை பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு வர்த்தக நிலையங்கள் ஒவ்வொரு மாதமும் யாழ்.மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த டிசம்பர் மாதம் 11ம், 12ம் திகதிகளிலும் ஜனவரி மாதம் 17ம், 18ம் திகதிகளிலும் பலசரக்கு வியாபார நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டது.
பாவனைக்கு உதவாத பொருட்கள்
இதன்போது திகதி காலாவதியான உணவுப் பொருட்கள், பழுதடைந்த உணவு பொருட்கள், உரிய முறையில் சுட்டுத்துண்டு இடப்படாத உணவு பொருட்கள் மற்றும் வண்டு மொய்த்த உணவு பொருட்கள் என ஏராளமான மனித பாவனைக்கு உதவாத உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
மாநகர சபைக்கு உட்பட்ட யாழ்.நகர், நல்லூர், வண்ணார்பண்ணை பொது சுகாதார பிரிவுகளில் பொது சுகாதார பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் இவை கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட உணவு பொருட்களை நீதிமன்றில் ஒப்படைத்த பொது சுகாதார பரிசோதகர்கள் 20 கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் குறித்த வழக்குகள் இன்றையதினம் மேலதிக நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது கடை உரிமையாளர்கள் அனைவரும் குற்றத்தை ஏற்று கொண்டனர்.
இதனையடுத்து 20 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கும் மொத்தமாக 540,000/= தண்டப்பணம் நீதிமன்றால் விதிக்கப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.