யாழ்ப்பாணத்தில் பணிப் பகிஷ்கரிப்பில் தனியார் பேருந்துகள் ; பொலிஸார் குவிப்பு!
யாழ்ப்பாணத்தில் 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துநர்கள் இன்றைய தினம் (21) முதல் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் மயிலிட்டி பகுதியில் வீதிமறியல் போராட்டத்திலும் இறங்கியுள்ளனர்.
மயிலிட்டி பகுதியில் இருந்து தமது சேவைகளை ஆரம்பிக்க அனுமதி கோரியே அவர்கள் இந்த போராட்டத்தை நடத்துகின்ற நிலையில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை - வடக்கு மாகாண ஆளுநர்
764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் பேருந்து சேவைகளை இன்று முதல் காங்கேசன்துறை புகையிரத நிலையத்துக்கு அருகில் இருந்து ஆரம்பிக்குமாறும் அதை மீறிச் செயற்படும் பேருந்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்திருந்தார்.
இந்நிலையில் யாழ் நகர் பகுதியில் இருந்து புறப்படும் 764 வழித்தட பேருந்துகள் கடந்த காலங்களில், வசாவிளான் சந்தியில் இருந்து பருத்தித்துறை - பொன்னாலை வீதி வரையிலான பலாலி வீதி உயர்பாதுகாப்பு வலயத்தினுள் காணப்பட்டமையால் வசாவிளான் சந்தியுடன் தமது சேவைகளை மட்டுப்படுத்தியிருந்தன.
இந்நிலையில் மயிலிட்டி பகுதியில் வசிக்கும் மக்களின் நலன் கருதி, யாழ்ப்பாண நகரிலிருந்து புறப்படும் 769 வழித்தட பேருந்துகள் மயிலிட்டி வரை சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.
தற்போது உயர்பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும் பலாலி வீதி திறக்கப்பட்டுள்ளமையால் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் 764 வழித்தட பேருந்துகள் யாழ்ப்பாண நகரில் இருந்து புறப்பட்டு பலாலி வீதியூடாக பருத்தித்துறை - பொன்னாலை வீதியை அடைந்து அதனூடாக காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையம் வரை சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன.
அதேபோன்று பேருந்துகள் காங்கேசன்துறை புகையிரத நிலையத்துக்கு அருகில் இருந்து புறப்பட்டு யாழ்ப்பாணத்தை சென்றடைகின்றன.
இந்நிலையில் 769 வழித்தட அனுமதியில் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் தாம் இதுவரை காலமும் மயிலிட்டியில் இருந்து சேவையை ஆரம்பித்தது போன்று ஆரம்பிக்கவும் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு காங்கேசன்துறை வீதி வழியாக மயிலிட்டி வரை சேவையில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் எனக் கோரியுமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.