பிரதமரின் கருத்து நீரிழிவு நோயாளிக்கு இனிப்பு வழங்குவது போன்றது!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மைக்கு மதிப்பளிக்கவேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ.விஜேவர்தன வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் , மத்திய வங்கி மீதான எந்தவொரு தலையீடுகளும் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை வலுவிழக்கச் செய்துவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலை தொடர்பில் ஆராயும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வொன்றில் பங்கேற்றபோதே அவர் மேற்கண்டவாறு எச்சரித்துள்ளார்.
ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவை இடையூறின்றி மேற்கொள்வதற்கு பில்லியன் கணக்கான ரூபாய்களை அச்சிட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட கருத்து பல்வேறு கரிசனைகளைத் தோற்றுவித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதோடு, பிரதமரின் இந்த நடவடிக்கையானது நீரிழிவு நோயாளிக்கு சீனி அதிகளவில் உள்ள உணவை வழங்குவதைப் போன்றதாகும் என்றும் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ.விஜேவர்தன சுட்டிக்காட்டினார்.