கல்லூரி மாணவிகள், ஆசிரியைகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட அதிபர்.!
தமிழகத்தில் சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதியில் அரசு உதவியுடன் சௌடேஸ்வரி கலைக் கல்லூரி செயல்பட்டு வருகின்றது.
இந்த கல்லூரில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் கல்லூரியின் முதல்வர் பாலாஜி கடந்த சில மாதங்களாக மாணவிகள் மற்றும் ஆசிரியைகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை மாணவிகள் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அந்த மாணவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்தார்.
மேலும் இது தொடர்பில் தகவல் அறிந்ததும் கல்லூரி முதல்வர் பாலாஜியை கைது செய்யக்கோரி 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் கல்லூரியின் நுழைவுவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதல்வரை கல்லூரிக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய நிலையில் மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் இந்த முறைப்பாடு தொடர்பாக கல்லூரி முதல்வர் பாலாஜியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பில் ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் கூறுகையில்,
ஆசிரியைகள் மற்றும் மாணவிகளை தனியாக அழைத்து அவர்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபடுவதாகவும் இதற்கு மறுப்பு தெரிவிப்பவர்களை வேறு மாதிரியாக தொல்லை கொடுத்து மன உளைச்சல் ஏற்படுத்தி வருகின்றார்.
அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.
கல்லூரியில் நடைபெறும் முறைகேடுகளை மறைக்கவே தன் மீது பொய்யான குற்றம் சாட்டப்படுவதாகவும், இது தொடர்பாக அனைத்து விசாரணைக்கும் தயாராக உள்ளதாகவும் புகாருக்குள்ளான முதல்வர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கல்லூரி முதல்வர் மீது பாலியல் குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பாக கல்லூரி கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.