தேரரின் பூதவுடலுக்கு பிரதமர் இறுதி மரியாதை
காலஞ்சென்ற கலாநிதி வெலமிடியாவே குசலதம்ம தலைமை தேரரின் பூதவுடலுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (30) முற்பகல் பேலியகொட வித்யாலங்கார பிரிவேனாவில் இறுதி மரியாதை செலுத்தினார்.
கொழும்பு சிலாபம் இரு பகுதிகளினதும் பிரதான சங்கநாயக்கரும், களனி வித்யாலங்கார மஹா பிரிவேனாவின் பிரிவேனாதிபதியும், களனி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான குறித்த தேரர் நேற்றையதினம் உயிரிழந்திருந்தார்.
நாட்டில் பல்வேறு நெருக்கடிகள் மற்றும் பிரச்சினைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவற்றை தீர்ப்பதற்கு வணக்கத்திற்குரிய குசலதம்ம தேரர் முன்னின்று செயற்பட்டமையை பிரதமர் மகிந்த இதன்போது நினைவுகூர்ந்தார்.
வணக்கத்திற்குரிய குசலதம்ம தேரர் தனது வாழ்நாளில் அறுபத்தேழு ஆண்டுகளை புத்த சாசனத்திற்காகவே செலவிட்டுள்ளார்.
இதன்போது பேலியகொட வித்யாலங்கார பிரிவேனாவின் சாஸ்த்ரபதி ராஜகீய பண்டிதர் சிரேஷ்ட பாடலாசிரியர் வணக்கத்திற்குரிய வெலமிடியாவே கஞானரதன தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினரும் வருகைத் தந்திருந்தனர்.
அத்துடன் இராஜாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணவீர மற்றும் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே அவர்களும் குறித்த சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டனர்.
காலஞ்சென்ற வணக்கத்திற்குரிய வெலமிடியாவே குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகள் நாளை (31) சுதந்திர சதுக்கத்தில் முழு அரச மரியாதையுடன் இடம்பெறும் என தெரிவிக்கபப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.