இலங்கையில் இந்த பொருட்களின் விலை அதிகரிக்கும்!
பால்மா, கோதுமை மா, சீனி, அரிசி, எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் சீமெந்து, டயில்ஸ் உள்ளிட்ட பொருட்களின் விலையை அதிகரிக்குமாறு இறக்குமதியார்கள் வலியுறுத்தி வருகின்ற நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை காலை கூடும் வாழ்கை செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படுவதுடன் விலை அதிகரிப்பிற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக ஆளுந்தரப்பு தெரிவிக்கின்றது.
கொவிட் 19 வைரஸ் பரவல் நிலைமைகளிலும், இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் கடன் நெருக்கடி நிலைமையை அடுத்தும் இறக்குமதி செய்யும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் பக்கத்தில் இருந்து கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டும் வருகின்றது. குறிப்பாக கடந்த மூன்று வாரங்களாக பால்மா தட்டுப்பாடு காணப்படுகின்ற நிலையில் குழந்தைகள் கஷ்டப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தேசிய பால்மா வகைகள் சந்தைக்கு விடப்படுகின்ற போதிலும் பால்மாவை பெற்றுக்கொள்ள வெவ்வேறு நிபந்தனைகள் வியாபாரிகளினால் விதிக்கப்படுவதாக மிகப்பெரிய குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது.
நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை உள்ளிட்ட சிவில் அமைப்பினர் இந்த நிலைமைகளை அரச தரப்பிடம் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்ற நிலையில் அரசாங்கமும் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாளை அமைச்சரவை கூடவுள்ள நிலையில், அதற்கு முன்னர் நாளை காலையில் பிரதமர் தலைமையில் வாழ்க்கை செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூடி இந்த நிலைமைகளை ஆராயவுள்ளது.
அலரிமாளிகையில் காலை 10 மணிக்கு இவ்வாறு கூடும் தலைமையில் வாழ்க்கை செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுவில் விலை அதிகரிப்பை மேற்கொள்ளும் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக பால்மாவை 200 ரூபாவினாலும், எரிவாயுவை 550 ரூபாவினாலும், கோதுமை மாவினை 10 ரூபாவினாலும், சீமெந்தை 50 ரூபாவினாலும், அதிகரிக்க இறக்குமதியாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கையை அரசாங்கத்தினால் நிராகரிக்க முடியாது போயுள்ள நிலையில் விலையேற்றம் இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.